கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையால் இப்பகுதி ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளது. சங்கத்தின் கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தற்போதைய சவால்கள், உற்பத்தி தடைகள், ஏற்றுமதி நெருக்கடிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக, ஜவுளி உற்பத்திக்கு அத்தியாவசியமான பாலியஸ்டர், சாய ரசாயனங்கள், பாலிதீன், பேக்கிங் பொருட்கள் போன்ற பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்களின் விலை 30% முதல் 60% வரை உயர்ந்துள்ளது. மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சர்வதேச கப்பல் போக்குவரத்து தாமதங்கள் மற்றும் சரக்குகள் பற்றாக்குறை காரணமாக சாயமிடுதல், பிரிண்டிங், பிற ஜாப் வேலைகளின் செலவுகளும் அதிகரித்துள்ளன. உள்நாட்டு பருத்தி நூல் விலையேற்றமும் செயற்கையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மறுசுழற்சி செய்யப்பட்ட பருத்தி, பாலியஸ்டர் கலவை நூல்களின் விலையும் 10% முதல் 20% வரை உயர்ந்துள்ளது.
மேலும், கரூர் ஜவுளித் துறையில் பணிபுரிந்து வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். உள்ளூர் தொழிலாளர்களின் வருகையும் குறைந்துள்ளதால், உற்பத்தி பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஊதியச் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில், உற்பத்தியைத் தொடர்வதும், புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களை மேற்கொள்வதும் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் நிதிச் சுமையாக மாறியுள்ளது.
இந்த நிலை நீடித்தால், கரூர் ஜவுளித் துறையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் ஜவுளித் துறைக்கு உடனடி நிவாரணத் திட்டங்களை அறிவிக்க வேண்டும், மூலப்பொருட்களின் விலை நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வட்டி மானியம் மற்றும் நிதி உதவிகள் வழங்க வேண்டும், தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும், சிறு, நடுத்தர நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு மற்றும் ஊக்கத் திட்டங்களை வழங்க வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் தற்போதைய சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, விலையை மறு ஆய்வு செய்யவும், கால அவகாசத்தை நீட்டிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.