பாஜகவின் நிர்வாக முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்பியதன் காரணமாக, தனக்கு அனுப்பப்பட்ட ரூ.1 கோடி நஷ்டஈடு அவதூறு நோட்டீஸைத் திரும்பப் பெற வேண்டும் என பாஜக தேசிய தலைமையிடம் ஏ.என்.எஸ். பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'கட்சியின் நலன் மற்றும் ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, வெளிப்படையாக சில ஆலோசனைகளையும் கருத்துகளையும் முன்வைத்ததே நான் செய்த ஒரே தவறு. எனது நிலைப்பாட்டில் பிழை இருப்பதாகக் கருதினால், தலைமையே என்னிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருப்பதி நாராயணன் போன்றவர்கள் தனக்குக் கிடைக்கும் மக்கள் ஆதரவையும், ஊடக வெளிச்சத்தையும் கண்டு பொறாமை கொண்டு, தன்னை ஓரங்கட்ட சதி செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தனக்கு எதிராகத் திட்டமிட்டு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்திருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் எந்த அதிகாரப்பூர்வ பதவியையும் எதிர்பார்க்கவில்லை என்றும், ஆனால் நயினார் நாகேந்திரன் மற்றும் எல்.முருகன் ஆகியோர் அதிகாரத்தில் இருக்கும்வரை எந்தப் பொறுப்பையும் ஏற்கப்போவதில்லை என்றும் பிரசாத் கூறியுள்ளார். தமிழக பாஜகவில் ஒரு உண்மையான அடிப்படைத் தொண்டனாகத் தொடர்ந்து பணியாற்றுவதற்கு ஏற்ற, இணக்கமான சூழலை மட்டுமே அவர் கோருகிறார்.
எனவே, தமிழக பாஜக சார்பில் தனக்கு எதிராக அனுப்பப்பட்ட ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டுள்ள நோட்டீஸைத் திரும்பப் பெறுவதற்குத் தேசியத் தலைமை உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும், தன்னை மீண்டும் பாஜகவில் இணைத்துக் கொள்ளுமாறும் பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தமிழக பாஜகவின் நலன் காக்கும் பொருட்டு, கடந்த தேர்தலுக்கு முன்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களில் நடந்த சில முறைகேடுகள் மற்றும் தேர்தல் நிதி தொடர்பான விவகாரங்களை, எவ்வித உள்நோக்கமும் இன்றி தேசியத் தலைமையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதத்தின் நகல், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.