மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஹேதம்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கஜூரஹோ-உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக திடீரென வதந்தி பரவியது. இதனால் பீதியடைந்த பயணிகள் சிலர், உயிர் பிழைக்கும் நோக்கில் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் குதித்த தண்டவாளத்தில் வேகமாக வந்த மற்றொரு ரயில் அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வந்த தகவலால் பயந்து, அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்திய பயணிகள், கீழே இறங்கி அருகில் இருந்த தண்டவாளத்தில் நின்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துயர சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வதந்தியை நம்பி ரயிலில் இருந்து குதித்ததால் ஏற்பட்ட இந்த சோக சம்பவம், பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற வதந்திகளால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.