கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையையும் மீறும் வகையில் மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் அறிவிப்பு கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் நீர்த்தேக்கம் கட்டும் கர்நாடக அரசின் திட்ட அறிவிப்பு, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என முதல்வர் விஜய் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். சுமார் 30 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த காவிரி நதிநீர் பிரச்சினைக்கான தீர்வு, தற்போது அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், மேகேதாட்டு திட்டம் காவிரி நடுவர் மன்றம் அனுமதித்த திட்டங்களில் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நீர்ப் பற்றாக்குறை உள்ள காவிரிப் படுகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்ட திட்டங்களைத் தவிர்த்து வேறு புதிய திட்டங்களை மேற்கொள்வது தீர்ப்பில் தலையிடுவதற்குச் சமம் என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட வேண்டிய நீர்வரத்தைத் தடுக்கும் வகையில் கர்நாடகா செயல்படுவதாகவும், 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய மேகேதாட்டு திட்டத்தை முன்மொழிவதன் மூலம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்குக் கூட கர்நாடகா இதுவரை அனுமதி பெறவில்லை என்றும், மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல் உள்ளதால் இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் கருத்து தெரிவித்ததையும் முதல்வர் விஜய் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, மேகேதாட்டு திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறும், பிற மாநிலங்களின் ஒப்புதல் இன்றி திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறும் பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கோரியுள்ளார்.