திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ராஜேஷ்குமார். 'தேர்தல் தோல்விக்குப் பிறகும் திமுகவினர் பாடம் கற்கவில்லை' என்றும், 'வரம்பு மீறி விமர்சித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சென்னை மே 23 அன்று நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், 'காங்கிரஸ் கட்சி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, திமுகவின் முதுகில் குத்தி துரோகம் செய்துவிட்டது' என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ராஜேஷ்குமார், திமுக-காங்கிரஸ் கூட்டணி பரஸ்பர நலன்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகவும், தேர்தலில் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 'திமுகவின் வாக்குகளால்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது' என தேர்தல் முடிவுக்குப் பிறகு பேசுவது திமுகவின் மேலாதிக்க மனப்பான்மையைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக இளைஞரணி கூட்டத்தில் 'காங்கிரஸ் ஒழிக', 'விசிக ஒழிக' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதும், ராகுல் காந்தியை விமர்சித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதும் மிகுந்த வேதனை அளிப்பதாக அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது அரசியல் நாகரிகமற்ற செயல் என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இது நடந்தது கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளாக திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்றதில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மனப்பூர்வமாக மதிக்க வேண்டும் என்றும், கூட்டணியில் இருந்த கட்சிகளை வரம்பு மீறி விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். திமுகவின் இந்த இழிவான விமர்சனங்கள் தொடர்ந்தால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.