காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழ்நாடு அரசு சார்பில் அதன் உறுப்பினர் முனைவர். சத்யபிரத சாகு இ.ஆ.ப., டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்றார். இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.91 டி.எம்.சி. நீரை திறந்து விடுமாறு கர்நாடகாவிற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் பிரச்சினைகளில் சமரச தீர்வுகளை கண்டு வருகிறது. இதுவரை 50 கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், 51வது கூட்டம் இன்று (26.05.2026) டெல்லியில் எஸ்.கே.ஹய்தார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர், நீர்வளத்துறை முனைவர். சத்யபிரத சாகு பங்கேற்றார்.
கூட்டத்தில், மேட்டூர் அணையில் தற்போது 40.742 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளதாகவும், குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக வினாடிக்கு 1003 கனஅடி நீர் திறந்து விடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் (2025-2026) தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 176.885 டி.எம்.சி.க்கு பதிலாக, இதுவரை 329.166 டி.எம்.சி. நீர் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உறுப்பினர் குறிப்பிட்டார். கர்நாடகா வழங்கிய உபரி நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கர்நாடக உறுப்பினரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், கர்நாடகா தேக்க முடியாமல் வெளியேற்றிய நீரை சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 2026 முதல் தொடங்கும் என்றும், அது இயல்பான அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டும், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை ஆராய்ந்தும், தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய 9.91 டி.எம்.சி. நீரை பில்லிகுண்டுலுவில் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என ஆணையத்திடம் தமிழ்நாடு உறுப்பினர் வலியுறுத்தினார். ஆணையமும் இந்த கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.