ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் நடந்த பெரும் முறைகேடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே நேரில் வந்திருந்த நிலையில், வருகைப்பதிவேட்டில் 25 குழந்தைகள் வந்திருப்பதாகப் போலிப் பதிவு செய்யப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அங்கன்வாடி மையத்தில் மிகக் குறுகிய இடவசதி மட்டுமே உள்ளது. மேலும், சமையல் செய்யும் இடத்திலேயே குழந்தைகளையும் அமர வைக்கும் அவலநிலை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர், அங்கிருந்த வருகைப்பதிவேட்டை ஆய்வு செய்தபோது, 'வெறும் நாலைந்து குழந்தைகளே இருக்கும் நிலையில், 25 குழந்தைகளுக்கு எப்படி பிரசன்ட் போடலாம்?' என்று கேள்வி எழுப்பினார்.
செய்தியாளரின் கேள்விக்கு ஆத்திரமடைந்த அங்கிருந்த பெண் அதிகாரி, பதிலளிக்க மறுத்ததுடன், 'நீதிமன்ற விசாரணையோ, மாவட்ட ஆட்சியரின் கேள்வியோ, நான் கலெக்டரிடமே பேசிவிட்டேன், நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு கிளம்புங்கள்' என்று அலட்சியமாகவும், அதிகாரத் தோரணையிலும் பதிலளித்தார்.
தன் மீதான தவறை மறைப்பதற்காக, செய்தியாளரை நோக்கிப் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் மிரட்டல்களையும் அந்த அதிகாரி விடுக்கத் தொடங்கினார். 'பெண்களை மிரட்டிப் பணம் வாங்குவதுதான் உங்களுக்கு வேலையா? உங்களைப் போன்ற பல செய்தியாளர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்; இது தொடர்பாக நான் காவல்துறைக்குச் சென்று உங்கள் மீது புகார் அளிப்பேன்' என்று கேமரா முன்பாகவே நேரடியாக மிரட்டல் விடுத்தார்.
மேலும், 'நாட்டில் எத்தனையோ வெட்டு, குத்து, கொலைகள் நடக்கின்றன, அதை விடுத்து இங்கு ஏன் வருகிறீர்கள்? குழந்தைகள் வராத நாள்களில் அவர்களுக்கு ஆப்சென்ட் தான் போடப்பட்டுள்ளது' என்று கூறி உண்மையை மறைக்க முயன்றார். இருப்பினும், வருகைப்பதிவேட்டின் நகலை ஆதாரமாக வைத்திருந்த செய்தியாளர், அதிகாரியின் கண்மூடித்தனமான செயல்பாடுகளையும், முறைகேடுகளையும் கேமரா பதிவின் மூலம் அப்பட்டமாக அம்பலப்படுத்தினார்.
இந்த அங்கன்வாடி மையத்தின் முறைகேடு மற்றும் பெண் அதிகாரியின் திமிரான பேச்சு அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட Housing Board அங்கன்வாடி மையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும்.
போலி அட்டெண்டன்ஸ் போட்டு முறைகேடு செய்த அதிகாரி மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
