விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், இது விவசாயிகளின் கடன் சுமையை முழுமையாக தீர்க்காது என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது முதல்வர் விஜய் அறிவித்துள்ள ரூ.50 ஆயிரம் வரையிலான பயிர்க் கடன் தள்ளுபடி, அந்த வாக்குறுதிக்கு மாறானது. இது தலைமுறை தலைமுறையாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை குறைக்காது' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுவரை சாகுபடி நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்ட கடன் நிவாரணத்தை, 'பண மதிப்பை' அடிப்படையாகக் கொண்ட புதிய முறைக்கு மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாவட்டத்துக்கு மாவட்டம், பயிருக்கு பயிர் சாகுபடிச் செலவுகள் மாறுபடும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்து, மறு உத்தரவு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளது.