தற்போதைய தவெக அரசுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். வெள்ளை அறிக்கை வெளியிடும் அரசு, அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும் விளக்க வேண்டும் என்றும், திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதற்கு வெள்ளை அறிக்கையை சாக்குபோக்காக பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் உபரி பட்ஜெட்டை காண்பிக்க முடிகிறது. ஆனால், தமிழக அரசால் ஏன் அதைச் செய்ய முடியவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார். மேலும், பெண்களுக்கான வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அரசின் செயல்பாடுகள் விவசாயிகள் மீதான அக்கறையின்மையை காட்டுவதாகவும் அவர் விமர்சித்தார்.
மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஒரு மாத கால ஆட்சிக்கு சரியான மதிப்பெண் வழங்க முடியாது என்றும், பெண்கள் பாதுகாப்பில் இந்த அரசு 'Total Fail Mark' பெற்றுள்ளதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
பெண்களை கசக்கிப் பிழியும் ஓநாய்கள் 'சிங்கப்பெண் அதிரடிப் படை'க்கு தெரியவில்லையா என்றும், பெண்களை மரியாதையாக நடத்தாத சமூகத்தை நிச்சயம் மதிக்க முடியாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.