மக்களுக்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். கரூர் சம்பவத்தில் நமக்கு இத்தனை வலிகளை தந்தவர்களுக்கு, 2026 தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்டியுள்ளீர்கள். அவர்கள் காலம் காலத்திற்கும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு நிரந்தரமான ஒரு அடியை நீங்கள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், 'கரூர் விவகாரத்தில் என் மீது பழியைப் போட்டது முன்னாள் முதல்வர் ஸ்டாலின். அப்போது இருந்த காவல்துறையினரை நான் முழுமையாக நம்பினேன். அதனால்தான் எனது தங்கை, அக்கா, குழந்தைகளை இழந்தேன். என் வாழ்வில் அதிக வலி மற்றும் காயத்தை கொடுத்தது அந்த கரூர் சம்பவம் தான். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மனதில் ஏற்பட்ட காயங்களை மறக்க முடியாது. நிறைய வலி, காயங்களை தாண்டிதான் வந்துள்ளேன். நமக்கு இவ்வளவு காயங்களை கொடுத்தவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுத்தீர்கள் மக்களே. ஆனால், இது போதாது. இன்னும் காலம் காலத்திற்கும் அவர்கள் எழுந்திருக்க முடியாத அளவுக்கு அடியை நீங்கள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்' என்று பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், 'தீய சக்தி மாதிரி ரீல் தாய்மாமன் கிடையாது; நான் ரியல் தாய்மாமன். சட்டப்பேரவையில் பார்ட்டி ஃபண்ட் என்றுதான் சொன்னேன். எந்த கட்சிக்கான கட்சி நிதி என்று கூட சொல்லவில்லை. அதை சொன்னதும் எடுத்தார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம். நான் கரூர் சென்றபோது கூட்டம் அதிகமாக இருக்கிறது அங்கு செல்ல வேண்டாம் என்று கரூர் மாவட்ட காவல்துறை சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்களே என்னை உள்ளே கூட்டிச் சென்றார்கள். அப்போது தெரியவில்லை அவர்களது திட்டம் என்னவென்று. அது தெரியாமல் போலீஸ்க்கு நன்றியெல்லாம் சொன்னேன்! என் குடும்ப உறவுகளை இழந்து அந்த வலியோடு இருந்த என் மீது பழியை தூக்கிப் போடுகிறீர்களா? அந்த வலியோடு வீட்டில் இருக்கிறேன் அப்போது ஓடி ஒளிந்துவிட்டேன் என்று சொல்கிறீர்களே? வாய் என்று ஒன்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?' என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
