திமுக கட்சியை மறு கட்டமைப்பு செய்யும் நோக்கில், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு முக்கிய குழுவை அமைத்துள்ளார். இந்த மறுசீரமைப்பு குழுவில் முன்னாள் அமைச்சர்களான தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், சக்கரபாணி, சிவசங்கர் ஆகியோருடன், தமிழரசி ரவிக்குமார், அப்துல்லா, பரந்தாமன், முரசொலி, எழிலன், கே.பி. கருணா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவானது, மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, கட்சியின் சார்பு அணிகளின் மறுசீரமைப்பு, தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் செய்ய வேண்டிய சீரமைப்புகள், மற்றும் தேர்தல் பணிகளை செய்வதற்கான நிரந்தர அமைப்பாக செயல்படுவது குறித்து ஆராயும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தலைமைக்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் 'Think Tank' போன்ற அமைப்புக்கான தேவை, அக்குழுக்களுக்கான பணிகளின் மறுவரையறை குறித்தும் பரிந்துரைகளை இக்குழு ஆகஸ்ட் முதல் வாரத்தில் மு.க.ஸ்டாலினிடம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைகளை களைந்து, மக்களிடம் ஒரு புதிய வடிவில் செல்வதற்கு மறுசீரமைப்பும், மறுகட்டுமானமும் மிக அவசியம் என்பதை நாம் உணர்ந்து தயாராக வேண்டும். இந்த மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு, கிடைக்கப்பெற்றுள்ள கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பரிசீலித்து, தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்கும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையானது, திமுகவை மேலும் வலுப்படுத்தி, மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் எதிர்கால திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளில் இந்த குழுவின் பரிந்துரைகள் முக்கிய பங்கு வகிக்கும்.