கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் இருந்து தமிழ்நாட்டின் தேனிக்கு இயக்கப்பட்டு வந்த கேரள அரசு பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ராஜாக்காடு, பூப்பாறை, அடிமாலி பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தினமும் பகல் 12.55 மணிக்கு தொடுபுழாவில் இருந்து புறப்படும் இந்த பேருந்து, அடிமாலி மற்றும் ராஜாக்காடு வழியாக மாலை 6.45 மணிக்கு தேனியைச் சென்றடையும். அங்கிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, பூப்பாறை மற்றும் ராஜாக்காடு வழியாக கோட்டயம் செல்லும் வகையில் இந்த சேவை இயங்கி வந்தது.
இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நஷ்டத்தில் இயங்கியதால் பேருந்து சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்தனர். மேலும், தற்போது இந்த பேருந்து எர்ணாகுளத்தில் இருந்து நேரடியாக தேனிக்கு இயக்கப்பட உள்ளதாகவும், புதிய சேவை விரைவில் தொடங்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், இந்தப் பாதையில் பயணித்த ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாற்றுப் போக்குவரத்து வசதிகளைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். புதிய பேருந்து சேவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.