தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்த நிலையில், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய குடிமக்கள் மட்டுமே இந்தியாவில் வாக்களிக்க முடியும் என்ற நிலையில், வெளிநாடுகளில் நிரந்தரமாக தங்கி, அந்நாட்டு பிரஜைகளாக மாறி குடியுரிமை பெற்றவர்களின் இந்திய பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். அவர்களுக்கு அந்நாட்டு பாஸ்போர்ட் வழங்கப்படும். இத்தகையோர் இந்தியாவில் வழக்கம்போல் வந்து செல்லலாம் என்றாலும், தேர்தலில் வாக்களிக்க முடியாது.
இந்நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள், தங்கள் சொந்த தொகுதிகளில் வந்து வாக்களித்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் சென்றதையடுத்து, சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள குடிவரவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாக்களித்ததற்கான அடையாள மை உள்ள பயணிகளின் கைரேகைகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
வாக்களித்ததற்கான அடையாள மை இருந்து, அவர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற பயணிகளாக இருந்தால், அவர்களை விமானங்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டாம் என்றும், அவர்களின் விமான பயணங்களை ரத்து செய்து, காவல் நிலையங்களில் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, சென்னை விமான நிலையம் வந்த சில வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தது தெரியவந்தது. இவர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்துள்ளனர்.
இதேபோல், தமிழகத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் குடிவரவு அதிகாரிகள் நடத்திய சோதனையிலும் பலர் சிக்கியுள்ளனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் சுமார் 17 பேர் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் என தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தாலும், இவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.