தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை வென்ற விஜய்யின் தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதிமுக கட்சித் தலைமை விதிகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, அந்த 25 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், சிலர் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர். இதனால் சி.வி.சண்முகம் தரப்பில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சி.வி.சண்முகம் தரப்பில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா உடனடியாக ஏற்கப்பட்டு, அவர்கள் தவெகவில் இணைந்தனர். இன்று மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ராஜினாமா கடிதங்களை ஏற்கக் கூடாது என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சட்ட விதிகளுக்கு உட்பட்டே ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கமளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பின் மனு மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்பட்டாலும், அதை நிராகரிக்கவில்லை என்றும், தவெக அரசுக்கு ஆதரவு கூடுவது குறைவது தன் வேலை அல்ல, எண்ணிக்கையை சரிபார்ப்பது மட்டுமே தன் பணி என்றும் அவர் கூறினார்.