வேளாண் கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக முதல்வர் தனது தேர்தல் வாக்குறுதியில், 5 ஏக்கர் வரை சிறுகுறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கடன் தள்ளுபடி, விவசாயிகளை வஞ்சிப்பதாக அமைந்துள்ளது. இது வாக்குறுதி அல்ல, உத்தரவாதம் என்று அப்போது முதல்வர் கூறினார்'
மேலும் அவர் கூறுகையில், 'கடன் தள்ளுபடிக்கு கடன் நிலுவை தொகையில் சீலிங் வைப்பது இதுவே முதல் முறையாகும். ஒவ்வொரு சீலிங்கிலும் குறு விவசாயிகளுக்கு அறிவித்துள்ள கடன் தள்ளுபடியில் 50 சதவீதம் மட்டுமே சிறு விவசாயிகளுக்கு தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு 60,000 ரூபாயும், ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 36 ஆயிரம் ரூபாயும் வங்கிகள் கடனாக கொடுப்பதாக பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு இப்போது அறிவித்துள்ள தள்ளுபடிகள் வெறும் 5000 ரூபாய் மட்டுமே. இதுவரை நிலத்தின் அளவை சீலிங்காகக் கொண்டு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் புதிய முதல்வர், கடன் தொகையை அளவாகக் கொண்டு விவசாயிகளை ஏமாற்றியுள்ளார்'
கடந்த காலங்களில் ஒன்றிய அரசு 71 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழக அரசு இருமுறை 12000 கோடி மற்றும் 7000 கோடி ரூபாயும் கடன் தள்ளுபடி செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அப்போது இந்த சீலிங் முறை இல்லை என்றும், இப்போதைய தள்ளுபடி கூடுதல் தொகை 2000 கோடி ரூபாய் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார். 'தமிழ்நாடு அரசின் நிதி இருப்பு தெரிந்தே முதல்வர் வாக்குறுதி அளித்திருக்க வேண்டும். மேலும், கூட்டுறவு வங்கிகள் விவசாயிகள் கொடுக்கும் சிட்டா அடங்கல் பரப்பளவு முழுவதற்கும் பயிர்க்கடன் கொடுப்பதில்லை. சான்றுகளில் உள்ள பரப்பளவில் 30 சதவீதம் அளவிற்குரிய கடன் தான் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், கொடுக்கப்படும் சிட்டா அடங்கலை கணக்கில் கொள்ளாமல், விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் கடன் தொகையை அளவாகக் கொண்டு தள்ளுபடி அறிவிப்பு வெளியிட வேண்டும்'
குறு விவசாயிகள் பெரும்பாலும் கடன் பெறுவதில்லை என்றும், அவர்களுக்கு வங்கிகளும் தாராளமாக கடன் கொடுப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே, முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிப்படியே சிறுகுறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும், இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடியும் மறு ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும். மேலும், கடன் நிலுவையை ஒத்திவைக்க வேண்டும் என்றும், எந்த நிபந்தனையும் இல்லாமல் புதிய பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக பி.எஸ்.மாசிலாமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.