சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த பயணியின் உடமைகளில் இருந்து சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு இன்று வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த ஒரு பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருளைக் கண்டறிந்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.10 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள் போதைப்பொருளை பறிமுதல் செய்ததுடன், அந்த பயணியையும் உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பயணியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளிடம் இருந்து பெருமளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த சம்பவத்தின் மூலம், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தெளிவாகிறது.