மத்திய பிரதேச மாநிலம் விதிஷாவில், மகன் இறந்து 5 நாட்களாக அவரது சடலத்துடன் தாய் பிரார்த்தனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான பேஷன் டிசைனர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பால் விநியோகம் செய்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மகனின் சடலத்துடன் தாய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மகன் மீண்டும் உயிர் பெற்று வருவார் என்ற நம்பிக்கையில், அந்த தாய் கடந்த 5 நாட்களாக சடலத்தை விட்டு அகலாமல் பிரார்த்தனை செய்துள்ளார். மேலும், வீட்டில் எந்த சம்பவமும் நடக்காதது போலவே அன்றாட வேலைகளையும் அவர் செய்து வந்துள்ளார். தாயின் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மகனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஆசிரியையான அந்த தாயார், கணவர் இறந்த பிறகு மகனுடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு மொத்தம் மூன்று மகன்கள் உள்ளனர். மற்ற இருவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இறந்த மகனை நினைத்து துயரத்தில் ஆழ்ந்திருந்த அவர், அவரை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மகனின் மரண செய்தி உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும், தாயிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.