ஷரியா சட்டத்தை முன்னிறுத்தி சுமார் ரூ.6,000 கோடி மோசடி செய்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த ஆலிமா நவ்ஹேரா ஷேக் (52) என்ற பெண் குருகிராமில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹீரா குழும நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார்.
ஹீரா குழுமம் தங்கம், ஜவுளி, கிரானைட், சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் இணைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக ஆலிமா விளம்பரப்படுத்தினார். முஸ்லிம்களின் ஷரியா சட்டப்படி வட்டி பெறுவது குற்றம் என்றும், ஆனால் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் வட்டிக்கு பதிலாக ஆண்டுக்கு 36% ஈவுத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த கவர்ச்சிகரமான விளம்பர உத்தியால் ஈர்க்கப்பட்ட சுமார் 1.75 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஹீரா குழுமத்தில் ரூ.6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்தனர்.
ஆனால், வாக்குறுதி அளித்தபடி முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை வழங்கப்படவில்லை. முதலீட்டாளர்கள் வழங்கிய பணத்தை தனது சொந்த கணக்குகளுக்கு மாற்றிய ஆலிமா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்தார். இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை தனி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதன் பேரில் அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன.
பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்ற ஆலிமா மீது, தெலங்கானாவின் வாரங்கல் காவல் நிலையத்தில் 2021-ல் தங்க முதலீடு மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த வாரங்கல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. மேலும் ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றமும் கைது வாரண்ட் பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில், ஹரியானாவில் அவர் பதுங்கி இருப்பதாக அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெலங்கானா மற்றும் ஹரியானா போலீசாருடன் இணைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலிமாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.