சட்டமன்றத்தில் தண்ணீர் விநியோகம் தொடர்பாக நடைபெற்ற விவாதங்கள் குறித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் தண்ணீர் கொடுப்பது தொடர்பான கோரிக்கையை பிரேமலதா வைத்ததையும், அது தொடர்பான விவாதங்களையும் தொலைக்காட்சியில் கண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை, சட்டமன்றத்தில் நெகிழி பாட்டில்களில் தண்ணீர் வைப்பதைத் தவிர்க்கும் நோக்கில் ஒரு ஏற்பாடு இருப்பதாகக் கருதுவதாகக் கூறியுள்ளார். தான் தெலுங்கானா ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தெலுங்கானா ராஜ்பவனை முற்றிலும் நெகிழி இல்லாத ராஜ்பவனாக மாற்றியதை அவர் நினைவு கூர்ந்தார்.
அப்போது, கண்ணாடி குப்பிகளை வாங்கி, விருந்தினர்களுக்கு வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதன் மாதிரியைப் படமாகப் பதிவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த முறையை சட்டமன்றத்திலும் பின்பற்றலாம் என்றும், பயன்படுத்தப்படும் சிறிய குப்பிகள் வீசினாலும் காயத்தை ஏற்படுத்தாத வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் சட்டமன்றத்திலும் இதுபோன்ற மாற்றங்களைக் கொண்டுவரலாம் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.