தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தொடர் மின்வெட்டு மக்களிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டால் மக்கள் தவித்ததைப் போலவே, தற்போதைய தவெக அரசும் மக்களை வதைப்பது கண்டிக்கத்தக்கது. கொளுத்தும் வெயிலில் மின்சாரத்தை துண்டித்து குழந்தைகளையும், முதியவர்களையும் அவதிக்குள்ளாக்குவது தான் தவெக அறிவித்த மாற்று அரசியலா? முதல்வர அவர்கள் போர்க்கால அடிப்படையில் மின்சார விநியோகத்தை சீரமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையில், "தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பல மணிநேரங்கள் நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கோடைக் காலங்களில் அத்தியாவசியமான மின்சாரம், இப்படி அறிவிக்கப்படாமல் தடை செய்யப்படுவது மக்களின் அன்றாட வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே, இந்த தொடர் மின்வெட்டு பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும். மேலும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மற்றும் அமமுக போன்ற எதிர்க்கட்சிகள், மின்வெட்டை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியுள்ளன. இது குறித்து தமிழக அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.