2026 ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. லக்னோ அணி ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்டாலும், சொந்த மண்ணில் கௌரவத்தை காப்பாற்ற இந்தப் போட்டியில் விளையாடுகிறது.
டாஸ் வென்ற பிறகு பேசிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 'இது எங்களுக்கு வாழ்வா சாவா போன்ற போட்டி. இதுபோன்ற இக்கட்டான சூழலில் நாங்கள் இதற்கு முன்பு இருந்ததில்லை. இருப்பினும், அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். இந்தப் போட்டியின் முடிவு எங்களுக்குச் சாதகமாக அமையும் என நம்புகிறோம்' என்று தெரிவித்தார். பஞ்சாப் அணியில் மார்கோ ஜான்சன் மற்றும் விஜய்குமார் வைஷாக் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மறுபுறம், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், 'இந்தப் பிட்ச் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமானது. இந்த சீசன் எங்களுக்கு ஒரு கடினமான பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது. எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு எங்களது நன்றியையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று எங்களது 100 சதவீத உழைப்பைக் கொடுப்போம்' என்றார். லக்னோ அணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் அர்ஷின் குல்கர்னி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மைதானத்தின் எல்லைக் கோடுகள் மிகவும் சிறியதாக மாற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு பக்கம் 60 மீட்டராகவும், மறுபக்கம் 61 மீட்டராகவும் மட்டுமே உள்ளதாகவும் வர்ணனையாளர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் கிரேம் ஸ்வான் தெரிவித்தனர். பிட்ச் 70 சதவீதம் சிவப்பு மண் மற்றும் 30 சதவீதம் கருப்பு மண்ணால் ஆனது. புற்கள் ஆங்காங்கே வறண்டு காணப்படுவதால் பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவுக்கு கை கொடுக்கும். இருப்பினும், சிறிய எல்லைக் கோடுகள் இருப்பதால் அதிக ரன்கள் குவிக்கப்படும் போட்டியாக இது இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பிளே-ஆஃப் கனவோடு பஞ்சாப் அணியும், கௌரவத்தை மீட்கும் முனைப்புடன் லக்னோ அணியும் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குத் பஞ்சம் இருக்காது.