முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தமிழக அரசுக்கு, திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பையும் முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளார். இந்தச் சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
திருமாவளவனுக்கு அமைச்சரவையில் முக்கியப் பதவி வழங்கப்படலாம் என விஜய் தரப்பிலிருந்து மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழக அமைச்சரவையில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வாய்ப்பு குறித்து பரிசீலிக்குமாறு திருமாவளவனிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், முதலமைச்சர் விஜய்யின் அழைப்பை திருமாவளவன் ஏற்பாரா அல்லது வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் முடிவில் உறுதியாக இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முன்னதாக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால், திடீரென அந்த முடிவை வாபஸ் பெற்றார். பின்னர், அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த இளைய பெருமாளின் மகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
கடந்த வாரம், திருமாவளவனை முதலமைச்சராக்க வேண்டும் அல்லது துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றெல்லாம் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பு கைகூடாமல் போனது. தற்போது கிடைத்துள்ள இந்த அமைச்சர் பதவி வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பலரின் கருத்தாக உள்ளது. தொண்டர்களும் இதே விருப்பத்தையே தெரிவித்துள்ளனர். எனவே, திருமாவளவன் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வாரா அல்லது தற்போதைய நிலையிலேயே தொடர்வாரா என்பதை சில நாட்களில் எதிர்பார்க்கலாம்.