தமிழகத்தில் 14.23 லட்சம் விவசாயிகளின் பயிர்க் கடனில் ரூ. 2,044 கோடியை தள்ளுபடி செய்வதாக த.வெ.க அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி முழுமையாக கடன் தள்ளுபடி செய்யாதது குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்பது அரசியல் கட்சிகள் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது. இந்த கடன் தள்ளுபடி விவகாரத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும், 900 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 4 ஆயிரம் கடன் சங்கங்களும், 24 மத்திய கூட்டுறவு வங்கிகளும் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி வரை விவசாயக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கடன் சங்கங்களும் மத்திய கூட்டுறவு வங்கிகளும் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தன. காங்கிரஸ் ஆட்சியில் வைத்தியநாதன் கமிட்டியின் பரிந்துரையின்படி, சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மறுசீரமைப்பு நிதியாக மத்திய அரசு வழங்கியது. இதில் சுமார் 1,000 கோடி ரூபாய் தமிழகத்திற்கான நிதியாகும். இந்த நிதியைப் பெற, மாநில அரசுகள் நபார்டு வங்கியுடன் ஒரு புரிதலுணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, வங்கி நிர்வாகத்தில் அரசியல் தலையீடு மற்றும் கடன் தள்ளுபடி போன்ற விஷயங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்ற காரணத்தால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தார். இதனால், ரிசர்வ் வங்கி, செக்ஷன் 35(ஏ)-ன் படி சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியை முடக்கியது. இது தனது தொகுதிப் பிரச்சினை என்றாலும், 'இது ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை' என்று சிதம்பரம் ஒதுங்கிக்கொண்டார். பின்னர், ரூ.19 கோடியை மாநில அரசு செலுத்தினால் வங்கி மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என நபார்டு கூறியது. ஆனால் ஜெயலலிதா ரூ.13 கோடியை மட்டுமே செலுத்த ஒப்புக்கொண்டார். நபார்டு இதை ஏற்கவில்லை.
இந்த பஞ்சாயத்து ஒரு ஆண்டு காலம் நீடித்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கருணாநிதி முதல்வரானார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மூலம் சிவகங்கை விவகாரம் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் எடுத்த முயற்சியால், நிதிக்கான உத்தரவாதக் கடிதத்தை மட்டும் பெற்றுக்கொண்டு சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது நபார்டு. புரிதலுணர்வு ஒப்பந்தத்திலும் 2006-ல் கருணாநிதி அரசு கையெழுத்திட்டது. 2006-ல் திமுக அரசு சுமார் 7 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது. 2016-ல் ஜெயலலிதாவும் ரூ.5,318.73 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். 2021 பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி 12,110 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். ஆனால் அதைச் செய்ய இயலவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், 2021 மே மாதம் ரூ.12,110 கோடி பயிர்க்கடனை முறைப்படி தள்ளுபடி செய்தார். அதனுடன், ரூ.2,755.99 கோடி மகளிர் சுய உதவிக் குழு கடன்கள், சுமார் ரூ.6 ஆயிரம் கோடி நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்தார். இதன் மூலம், கடன் தள்ளுபடிக்காக மட்டுமே கடந்த ஆட்சியில் சுமார் ரூ.21 ஆயிரம் கோடியை வங்கிகளுக்கு செலுத்தியுள்ளது தமிழக அரசு.
விவசாயக் கடன் தள்ளுபடி என்று திமுக, அதிமுக வாக்குறுதி கொடுத்தாலே கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மிரண்டு போவார்கள். ஏனென்றால், யார் ஆட்சிக்கு வந்தாலும் உடனடி கடன் தள்ளுபடி அமலுக்கு வந்துவிடும். ஆனால், அரசிடமிருந்து அதற்கான தொகை உடனடியாக வங்கிகளுக்கு வந்து சேராது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல தவணைகளாக இழுத்தடித்தே தருவார்கள். இதனால் வங்கிகள் வட்டி இழப்பை சந்திக்கும். இதற்கெல்லாம் கடிவாளம் போடுவதற்காகவே, 'நபார்டு வங்கியின் அனுமதி இல்லாமல் கடன் தள்ளுபடியை மாநில அரசுகள் அறிவிக்கக்கூடாது. அப்படியே அறிவித்தாலும், தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்கான தொகையை அதிகபட்சம் 60 நாட்களுக்குள் முழுமையாக வங்கிகளுக்குச் செலுத்திவிட வேண்டும்' என்ற நிபந்தனைகளை கடந்த ஆண்டு நவம்பரில் அறிவித்தது நபார்டு. இது தெரிந்திருந்ததால் தான், திமுக இம்முறை விவசாயக் கடன் தள்ளுபடி பக்கமே போகவில்லை. நபார்டின் லேட்டஸ்ட் நிலவரம் தெரியாமல் அதிமுக-வும், த.வெ.க-வும் கடன் தள்ளுபடி அறிவிப்பை வாரி வழங்கின. அதிமுக ஆட்சிக்கு வராததால் தப்பியது. ஆட்சியைப் பிடித்த த.வெ.க, இந்த விஷயத்தில் ஆழம் தெரியாமல் ஆஃபர் கொடுத்துவிட்டோமோ என ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறது.