சென்னை கொளத்தூரில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான நிலத்தில் 234 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, அதில் 78 குடியிருப்புகளை வழங்கியதில் முறைகேடு செய்ததாக கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா கைது செய்யப்பட்டார். இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு, குண்டர் சட்டத்தில் சந்தோஷ் சர்மாவை சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, சென்னை மாநகர காவல்துறையின் அப்போதைய ஆணையரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான அருணை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அருண், மனுதாரரால் 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களிடம் போலி கையெழுத்து வாங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் இறங்கியதால், அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கம்பெனி லா போர்டு முன்பும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கினார்.
குண்டர் சட்டம் ஏன் போடப்பட்டது என நீதிபதிகள் கேட்டபோது, பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பிரச்சனை பெரிதாகிவிட்டதால் குண்டர் சட்டம் போடப்பட்டதாக அருண் பதிலளித்தார். உங்களை பற்றி சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகள் வருவதாக நீதிபதிகள் கேட்டதற்கு, தன்னை பற்றி சோசியல் மீடியாவில் தவறான, பொய்யான செய்திகளை பதிவிடுவதாகவும், காவல்துறையில் இதற்கு பதிலளிக்க உரிய அமைப்பு இல்லை என்றும் அருண் கூறினார். கடந்த 28 ஆண்டு கால போலீஸ் பணி அனுபவத்தில் தன் மீது ஒரு புகார் கூட இல்லை என்றும், நேர்மையாக பணி செய்யக்கூடியவர் என்றும், தவறு நடக்கும்போது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட குற்றவாளிகள், அயோக்கியர்கள் ஒன்று சேர்ந்து தனக்கு எதிராக சோசியல் மீடியாக்களில் தவறான பதிவுகளை எழுதுவதாகவும், அவர்கள் 100 சதவீதம் பொய் பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பேச்சு சுதந்திரம் சமூக வலைதளங்களில் எழுதுபவர்களுக்கு மட்டுமே உள்ளதாகவும், அரசு ஊழியர்களாகிய தங்களுக்கு அது இல்லை என்றும், இதனால் நீதிமன்றம்தான் தங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தனது பணி பதிவுகளை வாங்கி பார்த்தால் தனக்கு எதிராக ஒரு எழுத்து இருந்தாலும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், தனக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் ரவுடிகளை வைத்து சோசியல் மீடியாக்களில் ஆதாரமில்லாமல் விஷம பிரச்சாரம் செய்வதாகவும் அவர் கூறினார். மேலும் சில சமூக ஊடகங்கள் தான் தன் மீது பொய்யான, ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதாகவும் அருண் தெரிவித்தார். இதையடுத்து, சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தவறானது என்பதை தெரிவிப்பதற்காகவே உங்களை ஆஜராக உத்தரவிட்டதாக குறிப்பிட்ட நீதிபதிகள், சந்தோஷ் சர்மாவின் 4 வார ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை நாளை மறுநாள் பிறப்பிப்பதாக தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.