சென்னை: 'சைலன்ட் இன்ஃப்ளூயன்சர்' என்ற புதிய இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், தமிழ் சினிமாவில் நல்ல படங்களைக் கொடுக்கும் இயக்குநர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார்.
ராஜா பத்மநாபன் இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஐக்கி பெர்ரி இணைந்து பாடியுள்ளனர். பாடலை ஜெயந்தி எழுதியுள்ளார். அஸ்வமித்ரா இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு தினேஷ் நடனம் அமைத்துள்ளார். ஸ்ரி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் அசோக் அண்ணாமலை இதனைத் தயாரித்துள்ளார். நடிகர் பலராம் ஜெ. பாலாஜி இதில் நடித்துள்ளார்.
விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், "முழு படத்தைப் பார்ப்பது போன்ற ஒரு திருப்தியை இந்த இசை ஆல்பம் கொடுத்துள்ளது. இது நிச்சயம் வரவேற்கப்படும். ஆனால், நல்ல திரைப்படங்களை உருவாக்கும் திறமையான இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் குறைந்துவிட்டனர். அவர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை தயாரிப்பாளர்களும், நடிகர்களும் தவறவிட்டுவிட்டனர்" என்று வருத்தம் தெரிவித்தார்.
மேலும் அவர், "தமிழ் திரையுலகின் நலனைக் காக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். அப்போதுதான் சினிமாவின் தரம் உயரும், மேலும் பல நல்ல படைப்புகள் உருவாகும்" என்று கூறினார்.