தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தேனி, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டம் நியூ சென்னை டவுன்ஷிப்பில் 5 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 4 செ.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான முதல் கனமழை பெய்துள்ளது. இது, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஏற்பட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மே 17-ம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மே 18-ம் தேதி, தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. மே 19-ம் தேதி திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மே 20 முதல் 22 வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, தென்மேற்கு பருவமழை சனிக்கிழமை (மே 16) தென்கிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் நிகோபார் தீவுகளில் தொடங்கியது. கேரளாவில் மே 26-ம் தேதி பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மே 20-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், அந்தமான் கடல், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், ஆந்திரா, கேரளா, கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவுகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.