நரசிம்மரின் கோபத்தைத் தணிக்கும் லட்சுமி நரசிம்மர் கோவில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கனகவல்லி தாயார் உடனுறை லட்சுமி நரசிங்கப் பெருமாள் திருக்கோவில், திருமணத் தடை நீங்கவும், தம்பதியர் ஒற்றுமையாகவும் வாழ அருள்பாலிப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
தல வரலாற்றின்படி, இரணியனின் மகன் பிரகலாதன் நாராயணன் மீது கொண்ட பக்தியால், திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். நரசிம்மரின் உக்கிரமான கோலத்தைக் கண்டு அஞ்சிய மார்க்கண்டேய மகரிஷி, லட்சுமியிடம் அவருடைய கோபத்தைத் தணிக்கும்படி வேண்டினார். அதன்படி, லட்சுமி நரசிம்மரின் கோபம் தணிந்து அருள்பாலிக்கும் காட்சி உருவானது. இந்த தலத்தில், நரசிம்மர் தனது இடது தொடையில் லட்சுமியை அமர வைத்து, பக்தர்களுக்கு அருள் புரியும் அரிய காட்சியைக் காணலாம்.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக விளங்கும் இக்கோவில், ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கோவிலின் உள்ளே, தசாவதாரக் காட்சிகள், 63 நாயன்மார்கள், விஷ்ணு துர்க்கை, வேணுகோபாலன், கோதண்டராமர், சக்கரத்தாழ்வார், லட்சுமி ஹயக்ரீவர் போன்ற தெய்வங்களின் சன்னிதிகள் உள்ளன. கருவறையில், லட்சுமி நரசிம்மர் தனது இடது தொடையில் மகாலட்சுமியை அமர வைத்து, பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பிரகாரத்தில் கனகவல்லி தாயார், ஆண்டாள் நாச்சியார், அனுமன் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
திருமணத் தடை, செவ்வாய் தோஷம், ஏழரைச் சனி, ராகு திசை, கடன் தொல்லை, வழக்குகள் போன்றவற்றில் இருந்து விடுபடவும், தம்பதியர் ஒற்றுமையாகவும் வாழவும் இங்குள்ள லட்சுமி நரசிம்மரை வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் திருமஞ்சனம் செய்தும், விரலி மஞ்சளால் மாலை கட்டியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். திண்டிவனம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.