இன்றைய போட்டி நிறைந்த உலகில், பிள்ளைகளின் கல்வித்திறன் மீது பெற்றோர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 90% மதிப்பெண்கள் எடுத்தாலும், அதைவிட அதிகம் எடுத்தவர்களுடன் ஒப்பிட்டு வருந்தும் பெற்றோர்கள் மத்தியில், மும்பையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 55% மதிப்பெண்கள் எடுத்த தனது மகனை, பெற்றோர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த வாசிம் பட்டேல் என்பவரின் மகன் முகமது சையது, சமீபத்தில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மதிப்பெண்ணை பலரும் குறைவாக கருதினாலும், வாசிம் பட்டேல் மற்றும் அவரது மனைவி தங்கள் மகனின் முயற்சியைப் பாராட்டி, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேக்கில் மாணவனின் மதிப்பெண் பட்டியலும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து மாணவனின் தந்தை வாசிம் பட்டேல் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'எனது மகன் எடுத்த 55% மதிப்பெண், 85% அல்லது 95% மதிப்பெண்களை விட எனக்கு பெரியது. அவனை ஒரு நல்லவன் அல்லது கெட்டவன் என்று முத்திரை குத்துவதை விட, அவனது மனம் காயப்படாமல் இருப்பது எனக்கு முக்கியம். அவன் தன்னை யாரோடும் ஒப்பிட்டு தாழ்வாக நினைக்கக் கூடாது. அதனால்தான் அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த தந்தை-மகனின் பாசப் பிணைப்பையும், பெற்றோரின் அசாதாரண அணுகுமுறையையும் கண்டு பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். ஒரு மாணவர், 'நான் 85% மதிப்பெண் எடுத்தும் என் வீட்டில் இப்படி ஒரு கொண்டாட்டம் நடந்ததில்லை' என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், 'பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இப்படித்தான் கொண்டாட வேண்டும்' என வாசிம் பட்டேலைப் பாராட்டியுள்ளார். மேலும் ஒருவர், 'நான் 10-ஆம் வகுப்பில் 95% மற்றும் 12-ஆம் வகுப்பில் 94.8% மதிப்பெண்கள் பெற்றும், எனக்கு இதுபோன்ற கொண்டாட்டம் கிடைக்கவில்லை' என தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.