சென்னை: ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழாவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஐந்து தொடர் வெற்றிகளுடன் அசத்தி வந்த குஜராத் அணியின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் போட்டியில் குஜராத் அணி பெற்ற தோல்விக்கு, ரன்கள் விட்டுக் கொடுத்ததை விட வீரர்கள் செய்த மன்னிக்க முடியாத பிழைகளே முக்கிய காரணம் என கேப்டன் சுப்மன் கில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த குஜராத் அணிக்கு, பீல்டிங் ஒரு பெரும் சவாலாக அமைந்தது. கொல்கத்தா வீரர்களின் நான்கு மிக எளிமையான கேட்ச் வாய்ப்புகளை அடுத்தடுத்து கோட்டை விட்டனர். குறிப்பாக, அதிரடியாக விளையாடிய ஃபில் ஆலன் 14 மற்றும் 33 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட ஃபில் ஆலன், வெறும் 35 பந்துகளில் 93 ரன்களை விளாசி அசத்தினார்.
மேலும், கேமரூன் கிரீன் 23 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பும் நழுவவிடப்பட்டது. இவர் 52 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இளம் வீரர் ரகுவன்ஷிக்கு கொடுத்த கேட்ச் வாய்ப்பும் வீணடிக்கப்பட்டது. இப்படி வரிசையாகக் கிடைத்த நான்கு முக்கிய கேட்ச் வாய்ப்புகளை குஜராத் வீரர்கள் நழுவவிட்டதால், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 247 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது.
248 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி, போராடி 218 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் சுப்மன் கில், தனது அணியினரின் ஆட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்தார். 'இந்த ஆடுகளத்தில் 210 ரன்கள் என்பதே சவாலான இலக்கு. ஆனால் நாங்கள் மிக எளிமையான 3 அல்லது 4 கேட்சுகளைத் தவறவிட்டோம். நாங்கள் ஒரு குறிப்பிட்ட தரத்தில் விளையாடுகிறோம், ஆனால் இப்படி சிறுபிள்ளைத்தனமாக கேட்சுகளை விட்டால் நாங்கள் வெற்றிபெறத் தகுதியானவர்களே இல்லை' என்று அவர் கூறினார். 'நிச்சயமாக இது ஒரு ஏமாற்றமான ஆட்டம் தான். இருப்பினும், தகுதிச் சுற்றுகளில் இது போன்ற தவறுகள் நடப்பதை விட, லீக் சுற்றிலேயே இது நடந்தது ஒரு வகையில் நல்லது. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவோம்' என்றும் அவர் தெரிவித்தார்.