மருத்துவப் படிப்பில் சேர நடைபெறும் நீட் தேர்வு, அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) அந்த தேர்வை ரத்து செய்தது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளும் நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பின.
இதனைத் தொடர்ந்து, ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும், புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர், 'அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க முடியும். தேசிய தேர்வு முகமையை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ பாரபட்சமின்றி விசாரணை நடத்தும்' என்று உறுதியளித்தார். இந்த அறிவிப்பு, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.