கடந்த சில மாதங்களாகவே மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து இரண்டு எல்பிஜி கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இது இந்தியாவிற்கு ஒரு முக்கிய செய்தியாகும்.
பிப்ரவரி 28 முதல் ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும், இந்தியாவை நோக்கி புறப்பட்ட கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்து வருவதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிய சில கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்தன.
ஏப்ரல் 13 முதல் ஈரான் துறைமுகங்களை முடக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் அந்த ஜலசந்தியில் தனது கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று சமையல் எரிவாயுவை (எல்பிஜி) ஏற்றிக்கொண்டு 2 இந்திய கப்பல்கள் இந்தியாவை நோக்கி கிளம்பின. இந்த 2 கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்று தெரிய வந்துள்ளது. சைமி, என்.வி.சன்ஷைன் ஆகிய 2 வர்த்தக சரக்கு கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து வந்து கொண்டிருக்கின்றன என்று இந்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 13 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து இந்தியாவிற்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்களுக்கு அனுமதி தரப்படும் என்று ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சமையல் காஸ், கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் செல்கின்றன. இந்த வழியாகச் செல்லும் வர்த்தக கப்பல்களுக்கு மட்டுமே ஈரான் அனுமதி வழங்கும். அவ்வாறு செல்லும் வர்த்தக கப்பல்கள், ஈரான் நாட்டின் கடற்படைக்கு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மீறினால் அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படும்” என்றார்.