காங்கோ ஜனநாயக குடியரசில் மீண்டும் எபோலா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இதூரி மாகாணத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக இதூரி மாகாணத்தில் பரவி வந்த எபோலா வைரஸ் நோயால், இதுவரை பாதிக்கப்பட்டிருந்த 65 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 246 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்த நிலையில், மேலும் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்று பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எபோலா வைரஸ் என்பது மிகவும் ஆபத்தான நோயாகும். இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. காய்ச்சல், வாந்தி, பேதி, உடல் வலி போன்ற அறிகுறிகளுடன் தொடங்கும் இந்த நோய், உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும். உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது.