இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால், பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது என்று இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி எச்சரித்துள்ளார். டெல்லியில் உள்ள மானக் ஷா மையத்தில் நடைபெற்ற 'சேனா சம்வாத்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா 'ஆபரேஷன் சிந்துர்' என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும், பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றபோது, இந்திய வான் பாதுகாப்பு கருவிகள் அவற்றை நடுவானிலேயே அழித்தன. இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து அந்நாட்டு விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு வந்தது. இந்த 88 மணி நேர போர் கடந்த ஆண்டு மே மாதம் 10-ம் தேதி முடிவுக்கு வந்தது.
'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவம் மீண்டும் ஏற்பட்டால் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்று ராணுவ தளபதி உபேந்திர திவிவேதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெனரல் உபேந்திர திவிவேதி, 'பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால், உலக வரைபடத்திலோ அல்லது வரலாற்றிலோ பாகிஸ்தான் இடம் பெற வேண்டுமா இல்லையா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று ஆவேசமாக கூறினார். இந்த எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது.