மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக தேசிய தேர்வு முகமை (NTA) அந்த தேர்வை ரத்து செய்தது.
இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு வரும் ஜூன் 21-ஆம் தேதி மீண்டும் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும்.
தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தங்களுக்கு வசதியான தேர்வு மையங்களைத் தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பை தேசிய தேர்வு முகமை வழங்கியுள்ளது. இதற்கான இணையதள வசதி தற்போது திறக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் வரும் 21-ஆம் தேதி இரவு 11.50 மணி வரை இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு மையத்தை மாற்றுவதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.
தேர்வு நடைபெறும் தேதி, நேரம் மற்றும் தேர்வு மையம் குறித்த விவரங்கள் அடங்கிய ஹால் டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வ இணையதளங்களான neet.nta.nic.in மற்றும் nta.ac.in ஆகியவற்றில் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர்கள் இந்த இணையதளங்களில் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.