இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இரண்டு நாள் பயணமாக திருப்பதி வந்தார். அவருடன் அவரது மனைவியும் வந்துள்ளார். நேற்று திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்தனர்.
இரண்டாம் நாளான இன்று தலைமை தேர்தல் ஆணையாளர் தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு கோவில் வாசலில் திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் கோவில் அர்ச்சகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். வகுல மாதா, தங்க கோபுரம், பாஷ்யகாரர் சந்நிதி மற்றும் யோக நரசிம்மரையும் தரிசனம் செய்தார். வழிபாடுகளுக்குப் பிறகு ரங்கநாயகுலா மண்டபத்தில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர். தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி பிரசாதம் வழங்கினார். பட்டு வஸ்திரங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கோவில் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.