நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்வது மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதற்கு மத்திய அரசின் மக்கள் விரோத போக்கே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) விடுதலை ஆகிய கட்சிகள் கூட்டாக குற்றம் சாட்டியுள்ளன.
பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.3 வரையிலும், சி.என்.ஜி. எரிவாயுவை கிலோவுக்கு ரூ.2 வரையிலும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் மத்திய அரசு தொடுத்துள்ள மிகக் கொடூரமான தாக்குதல் என இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே மே 1-ந்தேதி முதல் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது மளிகை, காய்கறி, பழம், பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு நேரடியாக வழிவகுக்கும். இதனால், சாமானிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய அரசு மக்களை ஏமாற்றுவதாகவும், சர்வதேச சந்தையில் விலை குறைந்தபோதும் விலையை குறைக்கவில்லை என்றும் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே, பெட்ரோலியப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாகக் கருதி, மானியம் வழங்கி விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 20-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.