முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கருத்துக்களுக்கு, தமிழகத்தின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார். அணியின் நிர்வாகம் தனது பங்களிப்பையும் மதிப்பையும் அங்கீகரித்தால் மட்டுமே தொடர்ந்து விளையாடுவேன் என கோலி கூறியது, 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் அவரது பங்கேற்பு குறித்த விவாதங்களை கிரிக்கெட் உலகில் கிளப்பியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் அதிகாரபூர்வ போட்காஸ்டில் பேசிய கோலி, அணியின் கலாச்சாரம், வீரர்கள் தேர்வு மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான வாய்ப்புகள் குறித்து மனம் திறந்து பேசினார். தான் இன்னும் விளையாட்டை ரசிப்பதாகவும், அணி நிர்வாகம் தனது பங்களிப்பையும் மதிப்பையும் உண்மையாக நம்பினால் மட்டுமே தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 'என் திறமையை நான் நிரூபிக்க வேண்டும் என்று நான் உணரும்படி செய்யப்பட்டால், நான் அந்த நிலையில் இல்லை' என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு பணியிடத்தில் உங்கள் திறமைகளில் நம்பிக்கை இருப்பதாக கூறிவிட்டு, பின்னர் உங்கள் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கினால் அது ஏன் என்ற எண்ணம் தோன்றும் என தனது நிலையை கோலி விளக்கினார். 'ஒன்று, என் முதல் நாளிலேயே நான் போதாது அல்லது தேவை இல்லை என்று சொல்லுங்கள். ஆனால் நான் நல்லது என்று நீங்கள் கூறி, வேறுவிதமாக சிந்திக்கவில்லை என்றால், அமைதியாக இருங்கள்' என்றும் அவர் தனது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்தார்.
கோலியின் இந்தக் கருத்துக்களுக்கு அஸ்வின் வலுவான ஆதரவை தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கோலி சாதிக்க வேண்டிய அனைத்தையும் சாதித்துவிட்டதாகவும், அவருக்கு எந்தவொரு வெளி அங்கீகாரமும் தேவையில்லை என்றும் அஸ்வின் குறிப்பிட்டார். 'விராட் கோலி தான் யாருக்கும் தன் திறமையை நிரூபிக்கத் தேவையில்லை என்று சொன்னால், அது சரிதான். அவருக்கு யாருக்கும் நிரூபிக்க எதுவுமே இல்லை. என்னுடைய சிந்தனையும் அதுவே. இத்தனை ஆண்டுகளாக விளையாடி, இந்தியாவுக்காகப் பல போட்டிகளில் வென்ற பிறகு, அவர் யாருக்கு இன்னும் நிரூபிக்க வேண்டும்?' என அஸ்வின் கேள்வி எழுப்பினார். கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்களில் ஒருவரான கோலி, 311 போட்டிகளில் 14,797 ரன்கள், 58.71 சராசரியுடன் 54 சதங்கள் என சாதனைகள் படைத்துள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகிய நிலையில், 2027 ஒருநாள் உலகக் கோப்பை அவரது புகழ்பெற்ற சர்வதேச வாழ்க்கையின் இறுதி கட்டமாக அமையலாம்.