மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா, திரையுலகில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தற்போது 'சிஸ்டம்' என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 22-ம் தேதி அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சோனாக்சி, 'இன்றைய சினிமாவில் உண்மைகளை அப்படியே பேச முயற்சித்தால், படங்களுக்குப் பல தடைகள் வருகின்றன. இதனால், கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், உண்மையைச் சொல்வதிலும் திரையுலகினர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. படைப்பாளிகளுக்கு இது சவாலான காலம். ஒரு காலத்தில் இருந்த சுதந்திரம் இப்போது இல்லை' எனத் தெரிவித்தார்.
கடந்த 2010-ல் 'தபாங்' படத்தின் மூலம் அறிமுகமான போது இருந்த சினிமா சூழலை விட, இப்போது மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சமூக ஊடகங்களின் தாக்கம் ஆரம்பத்தில் இருந்தாலும், இப்போது அது அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் சினிமாத்துறை மேலும் கடினமானதாக மாறியுள்ளது.
'சில திரைப்படங்கள் எனக்குக் கெட்ட கனவுகள் போல அமைந்துள்ளன. கதை சொல்லப்படும் விதத்திற்கும், படமாக்கப்படும் விதத்திற்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. இருப்பினும், நான் நடித்த எந்தப் படத்தையும் குறை கூற மாட்டேன். எனது முழு சுயநினைவுடன் தான் அவற்றில் நடித்தேன். வாழ்க்கையில் தவறுகள் செய்வது இயல்பு, அவற்றைக் கடந்து முன்னேறுவதே முக்கியம்' என்று அவர் மேலும் கூறினார்.