ரஷ்யாவின் மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்திய தொழிலாளி உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடந்துள்ளது. இரவு முழுவதும் நீடித்த இந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் முழுமையான அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகம் வெளியிட்ட தகவலின்படி, மாஸ்கோவில் நடந்த இந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்திய தொழிலாளி உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தூதரக அதிகாரிகள், காயமடைந்த தொழிலாளர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். இந்த துயர சம்பவத்திற்கு இந்திய தூதரகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. உயிரிழந்த இந்திய தொழிலாளியின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தூதரகம் உறுதி அளித்துள்ளது.
உள்ளூர் அதிகாரிகளின் தகவல்களின்படி, ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் மொத்தம் 4 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், இந்த ட்ரோன் தாக்குதல்கள் முற்றிலும் நியாயமானவை என்றும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ட்ரோன் தாக்குதல்கள் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் காயங்கள் குறித்து சர்வதேச அளவில் கவலைகள் எழுந்துள்ளன. இந்த தாக்குதல்களுக்கு ரஷ்யா எவ்வாறு பதிலடி கொடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.