பிரதமர் நரேந்திர மோடி தனது ஐக்கிய அரபு அமீரக பயணத்தை நிறைவு செய்து நெதர்லாந்து சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை அவர் கண்டு ரசித்தார்.
நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் இந்திய வம்சாவளியினருடன் உரையாடிய பிரதமர் மோடி, நாட்டின் கலாச்சார பெருமைகள் குறித்து பேசினார். அப்போது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆனைமங்கலம் தாமிர செப்பேடுகள், அதாவது 'லெய்டன் தகடுகள்' பிரதமர் மோடியிடம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இது இந்திய வரலாற்றிற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இந்தக் கலைப் பொருட்கள், சுமார் 300 ஆண்டுகளாக நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. மத்திய அரசின் தொடர் முயற்சிகள் மற்றும் 2023-ல் யுனெஸ்கோ அமைப்பின் தலையீடு காரணமாக இந்த செப்பேடுகள் தற்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ளன.
இந்த செப்பேடுகள் சோழர்களின் சிறப்பையும், அவர்கள் புத்த மதத்திற்கு அளித்த ஆதரவையும் வெளிப்படுத்தும் முக்கிய வரலாற்று ஆவணங்களாகும். சுமார் 30 கிலோ எடை கொண்ட இந்த 21 செப்பேடுகள் ஒரு வெண்கல வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளன. முதலாம் ராஜேந்திர சோழரின் முத்திரையுடன், முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலங்களில் (985-1014) இவை உருவாக்கப்பட்டதற்கான சான்றுகள் இதில் உள்ளன.