சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பார்கள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை தொடர்பாக அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் அவர்களின் உத்தரவின் பேரில், 12 காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்களின் தலைமையில் இந்த சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், சட்டவிரோதமாக பார்கள் நடத்தியவர்கள் மற்றும் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் என மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அதிரடி சோதனையின் போது, சுமார் 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, வேளச்சேரி 100 அடி சாலையில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பார் மூடப்பட்டு, அதன் ஊழியர்களான பிரபாகரன் (32), சபரிமுத்து (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக இயங்கிய பார் மூடப்பட்டு, கார்த்திக் (36), பிரபாகரன் (40), கணேசா (61), வாஞ்சி நாதன் (43) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், திருவொற்றியூர் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை அருகே சில்லறையாக மதுபானம் விற்ற நீதி (38), ராஜபாண்டி (42), ரகுபதி (38), லட்சுமணன் (46) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கொண்டித்தோப்பு அம்மன்கோவில் தெருவில் சட்டவிரோதமாக செயல்பட்ட பார் மூடப்பட்டு, ஊழியர் மாரியப்பன் (65) கைது செய்யப்பட்டார். பிராட்வே தபால் அலுவலகம் சாலை, புது வண்ணாரப்பேட்டை பாலகிருஷ்ணன் தெரு, பாரதியார் நகர் பகுதிகள் என பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பார்கள் மூடப்பட்டு, ரகு (32), அமுல்ராஜ் (60), ராஜமாணிக்கம் (57) ஆகியோரும் கைது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.
நுங்கம்பாக்கத்தில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியார் மதுபாரில், அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி மது விற்பனை நடைபெற்றதும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக பார் உரிமையாளர் கார்த்திக் இளம்பழுதி மற்றும் மேலாளர் ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பார் மூடப்பட்டது. சென்னை நகர எல்லைக்குள் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து இது போன்ற சோதனைகள் நடைபெறும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.