தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, அதன் பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதனையடுத்து தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட சி.ஜோசப் விஜய், வீடுகளில் 2 மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருள் தடுப்புப் படை திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
விஜய்யின் பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், விஜய்யின் உறவினர்கள் பலரும் விழா அரங்கிற்கு வருகை தந்தனர்.
கூட்டணி கட்சித் தலைவர்களாக மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதே போல பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், பாமக தலைவர் அன்புமணி, சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தவெக தலைவர் விஜய் தன் ஃபேவரிட் கோட், வெள்ளை சட்டை அணிந்து வருகை தந்தார். வழக்கமாக இதுவரை தமிழகத்தில் பதவியேற்ற முதல்வர்கள் அனைவரும் வேட்டி அணிந்தே பதவியேற்று வந்த நிலையில், விஜய் அந்த வழக்கத்தை தவிர்த்துவிட்டு கோட் சூட் அணிந்து வந்தது கவனம் ஈர்த்தது. அவர் அரங்கினுள் நுழைந்ததும் உள்ளே அமர்ந்திருந்த தவெக தொண்டர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆராவாரம் செய்தனர். ‘டிவிகே’, ‘டிவிகே’ என்ற ஆர்ப்பரிப்பால் அரங்கமே அதிர்ந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்தபோது விஜய் சென்று அவரை கட்டியணைத்து வரவேற்றார். இருவரும் ஒன்றாக மேடைக்கு வந்து அமர்ந்தனர். அருகில் அமைச்சராக பதவியேற்க இருந்த 9 எம்எல்ஏக்களும் அமர்ந்தனர். 9.50 மணியளவில் தமிழக பொறுப்பு ஆளுநர் அரங்கிற்கு வருகை தந்தார்.
இதன் பிறகு முதல்வராக தனது முதல் உரையில் பேசிய விஜய், “சினிமாவில் ஒரு சாதாரண உதவி இயக்குநரின் மகன் தான் நான். எனக்கு வாழ்க்கையில் வறுமை, பசி என்றால் என்னவென்று தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன் தான். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான், என்னை வெற்றி பெறவைத்துள்ளீர்கள” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
எமோஷனலாக தொடங்கிய விஜய் பின்னர் தனது வழக்கமான பாணிக்கு மாறி அதிரடியாக பேசினார். “மக்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன். எனக்கு அந்த அவசியம் இல்லை. அதுபோல நான் யாரையும் தப்பு செய்யவும் விட மாட்டேன். எனது அரசில் யாரும் தவறு செய்ய விடமாட்டேன். ஜெயித்துவிட்டோம் என ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கலாம் என்ற என்ணம் இருந்தால், அதனை உடனே மறந்துவிடுங்கள்” என்று ஆவேசமாக தெரிவித்தார்.
இறுதியாக மேடையில் இருந்த அனைவரும் முதல்வர் விஜய்யுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். விஜய்யும் தனது செல்போனில் மேடைக்கு கீழே இருந்த தொண்டர்களை செல்ஃபி வீடியோ எடுத்துக் கொண்டார்.
புதிய முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் விஜய் தலைமைச் செயலகத்துக்கு சென்றார். அங்கு முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு அலுவல்களை தொடங்கினார். அவருக்கு தமிழக அரசின் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.