அதிமுகவில் தனியாக செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி அணி, மீண்டும் பழனிசாமி அணியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், 'எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு இல்லை. அந்த கருத்து வேறுபாடுகள் இப்போது நீங்கிவிட்டன. இனி ஒற்றுமையாக அதிமுக வலுவாக செயல்படும்' என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அனைவரும் கூட்டாக பழனிசாமியை அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாகவும் நியமிக்க கோரி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கடிதம் அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, 'கருத்து வேறுபாடு காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவளித்தோம். அப்போது இரு தரப்பிலும் தகுதி நீக்க மனுக்களை அளித்தோம், இப்போது எங்கள் இரு தரப்பில் கொடுக்கப்பட்ட மனுக்களையும் வாபஸ் பெற்றுவிட்டோம். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், அப்போதும் எங்கள் பொதுச்செயலாளர் பழனிசாமி தான் எனத் தெரிவித்திருந்தோம்' என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், 'ஒரு கட்சிக்கு வெற்றி, தோல்விகள் சகஜம். ஆனால், ஜெயலலிதா சொன்னதுபோல அதிமுக நூறாண்டுகள் இருக்க வேண்டுமானால், தோல்வி குறித்து ஆராய்வதற்கு பொதுக்குழுவை கூட்ட வேண்டும், குழு அமைக்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்திருந்தோம். அந்த கோரிக்கைகளை எல்லாம் பரிசீலித்து ஒவ்வொன்றாக செய்வதாக பொதுச்செயலாளர் கூறியுள்ளார். எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு இல்லை. இப்போது எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கிவிட்டது. இனி ஒற்றுமையாக அதிமுக வலுவாக செயல்படும். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என பழனிசாமி எங்களிடம் கோரிக்கை விடுத்தார்' என தெரிவித்தார்.
'அதிமுக பொன்விழா கண்ட கட்சி, 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்தது. நாங்கள் பதவிக்காக தவெகவை ஆதரிக்கவில்லை, இதனை ஆளுங்கட்சியும் தெளிவுப்படுத்தியது. தோல்விக்கு பின்னர் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை வைத்தோம். சி.வி.சண்முகமும் எங்களுடன் தான் இருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்' என்றும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.