புதுச்சேரி: ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவோம் என்றும், இடைத்தேர்தல் வந்தால் தவெக வேட்பாளர்கள் படுதோல்வி அடைவார்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் பாமக முன்னாள் மாநில அமைப்பாளர் தன்ராஜ் இல்லத்திற்கு வருகை தந்த பாமக தலைவர் அன்புமணி, செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மக்களின் விருப்பத்திற்கு எதிராக, நான்கு எம்எல்ஏக்களை வெற்றி பெற்று 20 நாட்களிலேயே ராஜினாமா செய்ய வைத்து, 10 நிமிடத்தில் தவெகவில் இணைத்தது ஜனநாயகப் படுகொலை. இது மோசடி. இளைஞர்களின் நம்பிக்கைக்கு எதிரான செயல். இது குதிரை பேரத்தை விட மோசமானது. தமிழகம் இதுபோன்ற சூழலை பார்த்ததில்லை. வாக்களித்த மக்கள் என்ன தவறு செய்தார்கள்?' என கேள்வி எழுப்பினார்.
'இடைத்தேர்தல் வந்தால் நான்கு வேட்பாளர்களும் படுதோல்வி அடைவார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம். அந்தளவுக்கு எங்களை தள்ளாதீர்கள். மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 3 தொகுதிகளின் வெற்றிக்கு பாமகவின் பங்களிப்பு மிகப்பெரியது. இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். முதல்வர் விஜய், அவரது அமைச்சர்களும் மக்களை அலட்சியப்படுத்தாதீர்கள். கோடிக்கணக்கான இளைஞர்களும் இடைத்தேர்தலில் உங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள்' என்றும் அன்புமணி கூறினார்.
மேலும் அவர், 'சமூக நீதி கணக்கெடுப்பை நடத்தி, தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களில் 2.5 கோடி மக்களின் நிலையை அறிந்து அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துங்கள். ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களை கைவிடுங்கள். தவெக அரசுக்கு ஓரிரு மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் கேட்போம். சட்டப்பேரவையில் வாக்கெடுப்பை பாமக எதிர்க்கவில்லை, ஆதரிக்கவும் இல்லை. கண்மூடித்தனமாக நாங்கள் எதிர்க்க மாட்டோம், அதே நேரத்தில் கணமூடித்தனமாக ஆதரவும் தெரிவிக்க மாட்டோம்' என்றும் தெரிவித்தார்.
