கர்நாடக அரசியலில் இன்று ஒரு முக்கிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமார், ஜி.பரமேஷ்வர் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர். அப்போது, இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்கப்படும் என காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சித்தராமையா முதல்வராகப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில், டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, டெல்லியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முதல்வர் மாற்றம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து விலகி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்துமாறு மேலிடத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு சித்தராமையா சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இன்று பெங்களூரு திரும்பும் அவர், அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த உள்ளார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடத் தலைவர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, சித்தராமையாவின் ராஜினாமா முடிவை அறிவிப்பார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, முதல்வர் சித்தராமையா இன்று கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டைச் சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி மாற்றங்கள் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.