புனேவில் நடந்த கொடூரமான போர்ஷ் கார் விபத்தில் இரண்டு அப்பாவி உயிர்கள் பறிபோன நிலையில், ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி சிறுவனின் தந்தை பணமாலையுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனேவில், 17 வயது சிறுவன் ஒருவன் மதுபோதையில் அதிவேகமாக போர்ஷ் காரை ஓட்டிச் சென்று, பைக்கில் சென்ற இரண்டு இளம் ஐடி ஊழியர்கள் மீது மோதியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் மைனர் என்பதால், சிறார் நீதி வாரியம் சாலைப் பாதுகாப்பு குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற வினோதமான நிபந்தனையுடன் மிக எளிதாக ஜாமீன் வழங்கியது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், சிறுவன் மது அருந்தியதற்கான சோதனையில், மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து தனது தாயாரின் ரத்த மாதிரியை மாற்றியதும் விசாரணையில் அம்பலமானது. இதனால் சிறுவனின் தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 22 ஆம் தேதி, சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் கிடைத்ததை கொண்டாடும் விதமாக, சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் கழுத்தில் பணமாலையுடன், தனது மகன் மற்றும் மனைவியுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை கண்ட பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, வைரலாகும் வீடியோ 2023 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும், தற்போதைய ஜாமீனுடன் அதற்கு தொடர்பில்லை என்றும் சிறுவனின் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், இந்த சம்பவம் நீதித்துறையின் மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
