சென்னையில் பணம் இல்லாததால், உயிரிழந்த தனது மனைவியின் உடலை மூட்டைக் கட்டி சாலையோரம் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிசூலம் அருகே சாலையோரம் கிடந்த சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சாக்கு மூட்டையை சோதனையிட்டபோது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலமாக கிடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (75) என்பதும், அவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதும் தெரியவந்தது.
பாக்கியலட்சுமிக்கு பத்து பிள்ளைகள் இருந்தும், யாரும் அவரை கவனிக்க முன்வரவில்லை என்றும், அவர் பூ வியாபாரம் மற்றும் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்த முகமது அசன் (63) என்பவருடன் பழக்கத்தின் பேரில் வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முகமது அசன் வேலை பார்த்து வந்த ஓட்டல் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டதால், அவரும் வேலையிழந்து வருமானமின்றி தவித்து வந்துள்ளார்.
இந்த சூழலில் பாக்கியலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால், சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசியதாக முதியவர் முகமது அசன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர்கள் யாராவது உடலை எடுத்து அடக்கம் செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார். இது குறித்து பல்லாவரம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.