தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள கூட்டணி அமைச்சரவையை பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். கூட்டணி ஆட்சி என்பது அதிகாரப் பகிர்வு மட்டுமல்ல, பொறுப்புப் பகிர்வும் ஆகும் என்றும், இது தமிழக அரசியலில் ஒரு புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கூட்டணி ஆட்சி என்ற அரசியல் நிலைப்பாட்டை பாமக பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்ததாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். அதிகாரம் ஒரே கட்சியில் குவியாமல், பல்வேறு அரசியல் சிந்தனைகளுக்கும் சமூகப் பிரதிநிதித்துவத்திற்கும் இடமளிக்கும் ஆட்சி முறையே ஜனநாயகத்தின் உண்மையான வடிவம் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. தற்போது தமிழக மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த கூட்டணி அரசில், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய பங்கு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அரசியல் முன்னேற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தவெக, கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் மதித்து செயல்படுவது ஜனநாயகத்திற்கு வலுசேர்க்கும் என ராமதாஸ் கூறியுள்ளார். ஆட்சி என்பது ஒரே கட்சியின் விருப்பப்படி நடைபெறுவது அல்ல என்றும், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் அனுபவம், கருத்து, மக்கள் நலப் பார்வை ஆகியவை இணைந்தால் மட்டுமே நல்லாட்சியை வழங்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சரவைப் பதவிகளில் மட்டும் கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்பு நின்றுவிடாமல், அரசின் கொள்கைகள் வகுப்பதிலும், மக்கள் நலத் திட்டங்களைத் திட்டமிடுவதிலும், நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மாற்று ஆலோசனைகளை வழங்குவதிலும் அவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதே கூட்டணி ஆட்சியின் உண்மையான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், சமூக நீதி, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விவசாயம் போன்ற துறைகளில் மக்கள் நல முன்னேற்றங்களை ஏற்படுத்துவதில் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் தற்போதைய கூட்டணி அமைச்சரவை ஜனநாயகத்திற்கும், அரசியல் நாகரிகத்திற்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்றும், மக்கள் நலனுக்கான சிறந்த ஆட்சியாக மலர்ந்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.