தமிழக முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தராகும் திமுக அரசின் நடைமுறையை பின்பற்றும் கட்டாயம் இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் மதுரையில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை தல்லாகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் சார்பில் அமைச்சர் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிலைத்து நிற்க காங்கிரஸ் கட்சி முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் என்றும் உறுதியளித்தார்.
உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரி சேர்க்கை கவுன்சிலிங் தொடர்பாக வருகிற ஜூன் 3-ம் தேதிக்குள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவிப்பேன் என்றும், மருத்துவம் மற்றும் பொறியியல் தேர்வுகளில் தமிழ் இடம் பெறாதது 'டெக்னிக்கல்' காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் பொறுப்பேற்பது திமுக அரசின் நடைமுறை என்றும், அதை பின்பற்றும் கட்டாயம் தங்களுக்கு இல்லை என்றும், தமிழக முதல்வரின் கொள்கை முடிவின்படி செயல்படுவோம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஒரு கட்சி எம்.எல்.ஏ தனது விருப்பத்திற்கு ஏற்ப பதவியை ராஜினாமா செய்து, விரும்பும் கட்சியில் இணைந்து மீண்டும் மக்களை சந்தித்து எம்.எல்.ஏ.வாக விரும்புவது ஜனநாயகத்தில் குதிரை பேரம் இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இதனிடையே, துணைவேந்தர் குறித்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளித்தார். 'பல்கலைக்கழகங்களில் வேந்தர்களாக முதலமைச்சர் பொறுப்பேற்பது குறித்து முதல்வர் விஜய் உரிய நேரத்தில் கொள்கை முடிவு எடுப்பார் என்றுதான் கூறினேன். சில ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மறுக்கிறேன். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் எனது கருத்து அமைந்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. இத்தகைய வாதங்களை முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்' என அவர் தெரிவித்துள்ளார்.