சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தான் ஏன் சந்தித்தேன் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விரிவாக விளக்கமளித்துள்ளார். சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் எழுந்தன. அது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் தர வேண்டும் என நினைத்தேன். அதற்காகத்தான் இன்று உங்களை சந்திக்க வந்துள்ளேன்' என்று கூறினார்.
'தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நான் ஸ்டாலின் சாரை சந்தித்தது விமர்சனத்துக்கு உள்ளானது. ஸ்டாலின் சாருக்கும் எனக்கும் இடையிலான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அவர் எனது நீண்ட கால நண்பர். ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வியடைந்தது எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால் நண்பர் என்ற முறையில் அவரைச் சென்று பார்த்தேன். ஆனால், விஜய் முதல்வர் ஆகக்கூடாது, அதிகாரத்துக்கு வரக்கூடாது, அதைத் தடுக்கவே நான் அங்கு சென்றதாக வதந்திகள் பரவின. அந்தச் சூழலில் அப்படிப் பேச முடியாது. அப்படி தரம் தாழ்ந்து பேசக்கூடிய நபர் நான் அல்ல' என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
'மேலும், நான் அவருக்கு (விஜய்) வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. அவர் வென்றதும் எக்ஸ் தளத்தில் எனது வாழ்த்துகளைப் பதிவு செய்திருந்தேன். விமான நிலையம் செல்லும் வழியில் ஒரு நபர், 'விஜய் முதல்வர் ஆகிவிட்டார்' என்று சொன்னபோது, நான் புன்னகையுடன் சென்றுவிட்டேன். அதை வைத்து நான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. எனக்கு விஜய் மீது பொறாமை என்றும் கூறப்பட்டது. நான் அரசியலில் இல்லாதபோது, அவர் மீது எனக்கு ஏன் பொறாமை வரப்போகிறது? ஒருவேளை கமல்ஹாசன் முதல்வர் ஆகியிருந்தால் கூட எனக்கு பொறாமை வந்திருக்காது. எனக்கும் விஜய்க்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது. நாங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுவது எங்களுக்கு நல்லதல்ல என்று நான் அவரிடம் கூறியுள்ளேன்' என ரஜினிகாந்த் விளக்கினார்.
'சிறு வயதிலிருந்தே அவரைப் பார்த்து வருகிறேன். அவர் முதல்வர் ஆவதில் எனக்கு என்ன பொறாமை? அவர் இளம் வயதில் முதல்வர் ஆகியுள்ளார். எம்ஜிஆர், என்டிஆர் செய்த சாதனைகளை விட அவரது சாதனை பெரியது. தனியொருவராக பெரிய கட்சிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளார். சினிமாத்துறையில் இருந்து வந்து அவர் சாதித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. மக்கள் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதற்காக எனது வாழ்த்துகள். நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பது குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளேன். எனது ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் இணைந்து பயணிக்கலாம் என ஏற்கெனவே கூறியுள்ளேன். அரசியல் என்பது மிகப்பெரிய பொறுப்பு. ஆறுபது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சினிமா புகழ், இளைஞர்கள், மகளிர் கொண்டு வந்துள்ள மாற்றம் இது' என்று தெரிவித்தார்.